15

14 வண்ணங்களே வாழ்க்கை

” பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் ” என்பார்கள் . பெரிய போர்ப்படையே பாம்பைக் கண்டவுடன் சிதறி ஓடுவார்கள் என்ற அர்த்தத்தில் சொல்லி இருப்பார்களோ ?

ஆனால் எனக்குப் பயத்தோடு பல கேள்விகளும் வியர்வையுடன் வந்தது . ஒரு நிறுவனத்தில் குறிப்பிட்ட பகுதியில் பாம்புகள் குடும்பத்துடன் வந்து குடியிருக்கின்றது என்றால் , ‘ இந்தப் பகுதி கவனிப்பார் இன்றி ஆள் ஆரவமின்றி இருக்கின்றது என்று அர்த்தம் ‘ என்பதை மனதில் குறித்துக் கொண்டேன் .

பிரிண்டிங் (PRINTING DEPARTMENT) துறை என்பது ஆயத்த ஆடைத்துறையில் முக்கியமான துறையாகும் . வெள்ளை மற்றும் வண்ண ஆயத்த ஆடை என்றால் அதற்குத் தனிப்பட்ட மதிப்பு எதுவும் இருக்காது . அதுவே அந்த ஆடையின் மேல் ஒரு சிறிய பிரிண்ட் அல்லது எம்ட்ராய்டரி இருக்கும் பட்சத்தில் அதன் மதிப்பே தனி . விலையும் அதிகமாக இருக்கும் . இவற்றைத்தான் மேலை நாடுகள் விரும்புகின்றன .

திருப்பூரில் உள்ள நிறுவனங்களுக்கென்று சில சிறப்புத் தகுதிகள் உண்டு . கடினமான விசயங்களை இயல்பாக எடுத்துக் கொண்டு சாதிக்கும் வல்லமை கொண்டவர்கள் . அசராத உழைப்பு . இந்த இரண்டும் தான் மத்திய , மாநில அரசாங்கங்கள் ஒத்துழைப்பு கொடுக்காத பட்சத்திலும் கூடப் பல சிரமங்களையும் கடந்தும் திருப்பூர் வளர்ந்து கொண்டே இருக்கின்றது .

உலகளாவிய போட்டி உள்ள இந்தத் தொழிலில் திருப்பூருக்குப் போட்டியாகப் பங்களாதேஷ் , பாகிஸ்தான் , இலங்கை , சீனா , இந்தோனேஷியா , பர்மா போன்ற பல நாடுகள் இருந்தாலும் திருப்பூரின் வளர்ச்சியை நிறுத்த முடியவில்லை . அதற்கு முக்கியக் காரணம் இந்தப் பிரிண்ட்டிங் என்றால் மிகையாகாது .

காரணம் மற்ற நாடுகள் கடினமான வேலைப்பாடுகள் நிறைந்த ஆயத்த ஆடைகளை விரும்புவதில்லை . வேலை செய்ய எளிமையாக உள்ள வடிவமைப்புகளைத் தான் முதன்மையாகத் தேர்ந்தெடுக்கின்றார்கள் . மேலும் ஒரு ஆயத்த ஆடை தயாரிப்புச் செலவில் தங்கள் லாபத்தைக் குறைத்துக் கொள்கின்றார்கள் . உற்பத்திச் செலவை பல விதங்களில் தாங்கள் விரும்பும் அளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்கின்றார்கள் .

காரணம் அங்குள்ள தொழிலாளர்களை எந்த நிறுவனமும் மனிதர்களாக மதிப்பதில்லை . எவ்வித அடிப்படை வசதிகளையும் உருவாக்கித் தருவதில்லை . திருப்பூரில் உள்ள ஒரு டைலர் பெறும் ( எட்டு மணி நேரத்திற்கு அதிகபட்சமாக ரூபாய் 450) சம்பளத்தில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே மேலே குறிப்பிட்டுள்ள நாடுகளில் உள்ள டைலர் சம்பளமாகப் பெறுகின்றனர் . பத்து நபர்கள் பணிபுரிய வேண்டிய இடங்களில் மூன்று நபர்களை வைத்தே மொத்த வேலையையும் வாங்குகின்றார்கள் . ‘ மனித வளத்துறை ‘ என்ற பெயரில் பட்டியில் அடைக்கும் மாடுகளைப் போல நெருக்கமான இடங்களில் வைத்து வேலை வாங்குகின்றார்கள் .

இது போன்று பல விதங்களில் உற்பத்திச் செலவை கட்டுப்படுத்தி மேற்கத்திய சமூகம் விரும்பும் விலையை அவர்களால் கொடுக்க முடிகின்றது . ஆனால் எப்போதும் போல மேலை நாடுகளில் உள்ள கணவான்கள் மனித உரிமைகளைப் பற்றி வாய் கிழிய பேசுகின்றார்கள் .

இது தவிர அந்தந்த அரசாங்கம் அங்குள்ள ஏற்றுமதியாளர்களுக்கு ” ஊக்கத் தொகை ” (DUTY DRAW BACK) என்ற பெயரில் வாரி வழங்குகின்றார்கள் . இதற்கு மேலும் ஏழை நாடுகள் என்ற பெயரில் அவர்களிடம் இருந்து வாங்கும் பொருட்களுக்கு இறக்குமதி வரியை (IMPORT DUTY) வளர்ந்த நாடுகள் தள்ளுபடி செய்கின்றது .

இதன் காரணமாக இறக்குமதியாளர்களுக்குத் தனியாக 12 சதவிகித லாபம் கிடைக்கின்றது . கனடா , அமெரிக்கா , ஐரோப்பா போன்ற நாடுகளில் உள்ள இறக்குமதியாளர்கள் திருப்பூரில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அவரவர் வாழும் நாட்டின் அரசாங்கத்திற்கு இறக்குமதி வரி என்ற பெயரில் 12 சதவிகித வரியைக் கட்டிய பின்பே துறைமுகத்தில் இருந்து சரக்கை வெளியே எடுக்க முடியும் .

இந்த வசதிகள் எதுவும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்பவர்களுக்குக் கிடைக்காது . சென்ற காங்கிரஸ் ஆட்சியில் ஆனந்த் ஷர்மா என்பவர் வர்த்தகத் துறை அமைச்சராக இருந்தார் . ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பந்தம் உருவாக்கி திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு வரிவிலக்கு வாங்கித் தருகின்றேன் என்று ஆசையைக் காட்டி அவர் கோட் பையை நிரப்பிக் கொண்டது தான் மிச்சம் . இங்கே இருந்த அவரின் அடிபொடிகளும் அவருக்கு ஆராதனை செய்து காசைக் கொண்டு போய்க் கொட்டினார்கள் .

ஆனால் இவற்றையெல்லாம் மீறி திருப்பூர் இன்று வரையிலும் சந்தையில் நிற்பதற்கு முக்கியக் காரணம் இந்த வண்ண வண்ண பிரிண்ட்டிங் துறையே . பல வித வண்ணங்களோடு தங்கள் வாழ்க்கையைப் பின்னிப் பிணைந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வாழ்க்கையை இன்றைய மின்சாரத் தட்டுப்பாடு தடுமாற வைத்துக் கொண்டிருக்கின்றது .

இத்தனை பிரச்சனைக்கிடையேயும் இங்கே மற்ற நாடுகள் தர முடியாத தரத்தையும் , விலையையும் கொடுக்கக் கூடியவர்களாக இருக்கின்றார்கள் .

இறக்குமதியாளர்கள் விரும்பும் குறுகிய காலகட்டத்திற்குள் கொடுத்து விடுவதால் ” எனக்கு உன் விலை கட்டுபிடியாகாது ” என்று செல்பவர்கள் குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு மீண்டும் வந்து விடுகின்றார்கள் . இந்தச் சமயத்தில் இந்தப் பிரிண்ட்டிங் துறையைப் பற்றிப் பார்த்து விடுவோம் .

ஆயத்த ஆடையின் மேல் தீர்மானிக்கப்பட்ட பிரிண்ட எந்த அளவுக்குத் தேவைப்படுகின்றதோ அதன் வடிவத்தைக் காகித வடிவில் DESIGNER பார்வையிடுகின்றார் . குறிப்பிட்ட வடிவ அடிப்படையில் எந்த அளவுக்கு உருவாக்கப்பட வேண்டும் என்பதை மனதில் கொண்டு அதற்கான ஆயத்த ஏற்பாடுகளைத் துவங்கின்றார் . டிசைனர் கணினியில் வரைந்து கொடுத்து விடுவார் . மற்றொருவர் அதனைக் கொண்டு பிலிம் உருவாக்கி விடுவார் .

அதன் அடிப்படையில் பிரிண்ட்டிங் பட்டறைக்குத் தேவைப்படும் அளவுக்குச் சதுர மற்றும் செவ்வக வடிவில் நைலான் துணியில் பிரிண்டிங் வடிவத்தை மற்றொருவர் உருவாக்கித் தந்து விடுவார் . அந்தக் குறிப்பிட்ட மாடல் என்பது மெல்லிய நைலான் துணியில் உருவாக்கப்பட்டு இருக்கும் . நான்கு புறமும் கம்பி வடிவிலான உருளைகளால் உருவாக்கப்பட்டுச் சதுர மற்றும் செவ்வக வடிவிலான மாடல் உருவாக்கப்பட்டு விடும் . இந்த வடிவமைப்புப் பிரிண்ட்டிங் பட்டறைக்கு வருகின்றது .

ஒவ்வொரு பிரிண்டிங் பட்டறையிலும் தொழிலாளிகள் புஜபலபாரக்கிரமசாலிகளாக இருப்பதால் சலிக்காமல் வேலை செய்பவர்களாக இருப்பார்கள் . பெரும்பாலும் தமிழகத்தின் தென் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளிகள் தான் சாயப்பட்டறைத் துறையிலும் பிரிண்ட்டிங் துறையிலும் இருப்பார்கள் .

மெல்லிய நைலான் வடிவ துணியின் மேல் தேவைப்படுகின்ற வண்ண சாயத்தை அளவு பார்த்து ஊற்றுவார்கள் . மேஜையின் மேல் விரிக்கப்பட்டுள்ள துணி அல்லது நறுக்கப்பட்ட துணியின் மேல் வைத்து மேலும் கீழும் SCRAPPER துணை கொண்டு சாயம் எல்லா இடங்களிலும் பரவும்படி இழுப்பார்கள் .

கொட்டப்பட்டுள்ள சாயத்தை நைலான் துணியில் அழுத்தி இழுக்கும் போது நைலான் துணியின் மேலே உள்ள சாயமானது நைலான் துணியில் உள்ள மெல்லிய துளை வழியே ( குறிப்பிட்ட வடிவம் சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கும் ) உள்ளே இறங்கி துணியில் நாம் எதிர்பார்த்த புதிய வடிவம் பிறக்கும் .

ஒரு வடிவமைப்புக்கு எத்தனை நிறங்கள் தேவைப்படுகின்றதோ ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு SCREEN தயாராக இருக்கும் . இப்படித்தான் ஆயத்த ஆடைத் துணியில் தேவைப்படுகின்ற பிரிண்ட்டிங் வடிவத்தைக் கொண்டு வருகின்றார்கள் .

திருப்பூரில் உள்ள ஆயத்த ஆடைத்துறையில் உள்ள ஒவ்வொரு துணைத் துறைகளிலும் பங்கு பெறும் தொழிலாள வர்க்கத்தில் சில சிறப்புத் தகுதிகள் உண்டு என்பதை நாம் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும் . டைலர் என்பவர்களுக்கு உடல் உழைப்பு அதிகமாக இருக்காது . ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு பணிபுரிபவர்களாக இருப்பார்கள் . கட்டிங் மாஸ்டர்கள் எந்திரங்களின் துணை கொண்டு பணிபுரிபவர்களாக இருப்பார்கள் . செக்கிங் என்ற தரம் பார்த்துப் பிரிக்கக்கூடிய பகுதியில் பெண்கள் நாள் முழுக்க நின்று கொண்டே பணிபுரிய வேண்டியதாக இருக்கும் .

இது போன்று இங்குள்ள ஒவ்வொரு துறையிலும் SKILLED AND SEMI-SKILLED என்ற வகையில் கலந்து கட்டியதாக இருக்கும் .

ஆனால் சாயப்பட்டறை மற்றும் பிரிண்ட்டிங் துறையில் முழுக்க முழுக்க உடல் உழைப்பை நம்பியே செயல்பட வேண்டியதாக இருக்கும் . இன்றைய சூழ்நிலையில் நவீன தொழில் நுட்ப வசதிகள் வந்திருந்த போதிலும் மனித ஆற்றலின் பங்கு இங்கு அதிகமாகத் தேவைப்படும் . உடல் வலு உள்ளவர்களால் மட்டுமே இது போன்ற துறைகளில் காலம் தள்ள முடியும் .

பிரிண்ட்டிங் துறையில் பல பிரிவுகள் உள்ளது . TABLE PRINTING, MECHINE PRINTING, ROTARY PRINTING, STICKER PRINTING, FUSING PRINTING என்று பல பிரிவுகள் உள்ளது .

தொடக்கத்தில் இந்தத் துறை எந்த நவீனமும் எட்டிப்பார்க்காத நிலையில் இருந்தது . இதனைப் பிரிண்ட்டிங் பட்டறை என்று அழைத்தார்கள் . ஓடு வேயப்பட்ட நீண்ட செவ்வக வடிவில் தாழ்வாரம் போன்ற அமைப்பில் கிடைத்த இடத்தில் இருந்து கொண்டு செயல்பட்டார்கள் . முழுக்க மனித உழைப்பை மட்டுமே நம்பி செயல்பட்டார்கள் . செவ்வக மேஜை , அந்த மேஜையைத் தாங்க பத்தடிக்கு ஒரு கடப்பா கல் போன்ற அமைப்பில் உருவாக்கியிருப்பார்கள் . அதன் மேல் கெட்டியான காடாத்துணியைப் போட்டு இரண்டு பக்கமும் இறுகக் கட்டியிருப்பார்கள் . ஏறக்குறைய 120 அடி நீளமுள்ளதாக இருக்கும் .

ஆனால் இன்று மொத்தமாக மாறி விட்டது . மனித உழைப்புகள் தேவைப்பட்ட இடத்திற்கு எந்திரங்கள் வந்து விட்டது . இரண்டு நிறத்திற்கு யோசித்தவர்கள் இன்று 14 நிறம் வரைக்கும் கலக்கிக் கொண்டிருக்கின்றார்கள் . அதாவது உங்கள் புகைப்படத்தை அல்லது குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட புகைப்படத்தை ஒரே நாளில் வண்ண வடிவமாக மாற்றித் துணியில் பிரிண்ட் அல்லது எம்ப்ராய்ட்ரி வடிவத்தில் தந்து விடக்கூடிய நவீன தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டது தான் இன்றைய ஆயத்த ஆடை உலகம் .

இது தவிர ரோட்டரி பிரிண்டிங் என்றொரு பூதம் இந்தத் துறையையே மாற்றி விட்டது . ஒரு பெரிய தொழிற்சாலை போலவே 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கின்றது . இது எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது தெரியுமா ?

எத்தனை ஆயிரம் கிலோ ? உங்களுக்கு எத்தனை மணி நேரத்தில் வேண்டும் என்கிற அளவுக்கு இன்றைய நவீன தொழில் நுட்பம் இந்தத் துறையை வளர்ச்சியடைய வைத்துள்ளது .

என்ன வேண்டுமானாலும் பெறலாம் . எப்போது வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்கிற அளவுக்கு வளர்ந்து விட்டது . மொத்தத்தில் முதலீடு செய்யப் பணம் இருந்தால் போதும் . உலகளாவிய வணிக ஒப்பந்தத்தம் உருவாக்கிய செயல்பாட்டின் காரணமாக எந்த உயர் ரகத் தொழில் நுட்பத்தையும் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் திருப்பூருக்குள் கொண்டு வந்து விடலாம் . அந்நிய முதலீடு என்பது நம் நாட்டிற்குத் தேவையில்லை என்ற கருத்து முழுமையாகச் செல்லுபடியாகாத ஒரே ஊர் என்றால் அது திருப்பூர் மட்டுமே . காரணம் இங்குள்ள ஒவ்வொரு துறையிலும் உள்ள பல வித நவீன ரக எந்திரங்கள் அனைத்தும் ஒவ்வொரு நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டவையே . ஐந்து லட்சம் முதல் ஐந்து கோடி வரைக்கும் பலதரப்பட்ட எந்திரங்கள் தான் இங்கே ஆட்சி செய்கின்றது .

ஆனால் வருடந்தோறும் லட்சணக்கான பொறியாளர்களை இந்தியா உருவாக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும் . இங்கே எந்தக் கண்டுபிடிப்பும் உருவாக்கப்பட வில்லை என்பதோடு அதற்கான முயற்சிகளின் தொடக்கம் கூட இங்கே உருவாக்கப் படவில்லை .

அது குறித்து இங்கே எந்த ஆட்சியாளர்களும் கவலைப்படவும் இல்லை என்பது தான் ஆச்சரியத்தின் உச்சம் . நாம் 66 ஆண்டுகளுக்கு முன்னால் வரைக்கும் யாருக்கோ அடிமையாகத் தான் இருந்து அடக்கமாக வாழ்ந்து பழகியிருந்தோம் . இன்றும் பெரிய மாறுதல்கள் இல்லை .

சந்தைப் பொருளாதாரத்தில் ஒரு அங்கமாக இருக்கின்றோம் . ஆனால் நம்மை ஏதோவொரு சர்வதேச நிறுவனம் ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பதைத் தெரியாமலே பணம் துரத்தும் பறவையாக மாறி நாமும் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்று நம்பிக் கொண்டிருக்கின்றோம் .

இருட்டுக்குள் பாம்புகளுடன் நின்று கொண்டிருந்தாலும் பலவற்றையும் யோசித்துக் கொண்டிருந்த என்னை வெளியே நின்று கொண்டிருந்த முதலாளி ” இருட்டுக்குள் என்ன பார்த்துக் கொண்டிருக்கீறீங்க ?” என்ற அழைத்த குரல் கேட்டதும் சுயநினைவுக்குத் திரும்பினேன் .

இப்போது என் எதிரே படம் எடுத்து எதிரே நிற்கும் பாம்பு பங்களாளிகளுடன் ஒரு சமாதான உடம்படிக்கையை அவசரமாக உருவாக்கியே ஆக வேண்டும் என்ற அவசரத்தில் இருந்தேன் . நான் பாம்பு என்று கத்தினால் வெளியே இருக்கும் இரண்டு ஜம்பவான்கள் நிச்சயம் உள்ளே வந்து காப்பாற்றுவார்கள் என்ற எண்ணம் எனக்குத் துளி கூட இல்லை . பெல்ட்டு அவிழ்வது கூடத் தெரியாமல் தலை தெறிக்க ஓடி விடுவார்கள் என்று யோசித்துக் கொண்டே என் இக்கட்டான சூழ்நிலையை எப்படி வென்று வருவது என்று சுற்றும் முற்றும் பார்த்தேன் . ஒரே கும்மிருட்டாக இருந்தது . பக்கத்தில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டு கொள்ளவே சற்று நேரம் பிடித்தது .

இக்கட்டான சூழ்நிலையில் நம் தைரியமே ஆதாரம் . அவசரப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதை உணர்ந்து கொண்டு கண்களை இருட்டுக்குள் துழாவினேன் .

பக்கத்தில் தெரிந்த மேஜையின் மேல் கால் வைத்து ஏறினேன் . அது படபடவென்று சரிந்தது . சரிந்த வேகத்தில் உருவான சப்தம் கேட்டுப் பாம்புகள் வேகமாக ஊர்ந்து மறைந்தது .

எந்த விலங்கும் மனிதர்களை வம்புக்கு இழுப்பதில்லை . அதற்குண்டான வாழ்க்கையில் மனிதர்கள் குறுக்கிடும் போது தான் முதலில் முறைக்கின்றது . பிறகு எதிர்க்கின்றது . கடைசியில் போராடத் துவங்குகின்றது . நானும் ஒரு வழியாக அந்த இருட்டுக்குள் போராடி தட்டுத்தடுமாறி வெளியே வந்தேன் .

ஆனால் நான் இப்போது இந்த நிறுவனத்தில் பார்த்த பிரிண்ட்டிங் துறையில் பார்த்த வசதிகள் புதிய தொழில் நுட்ப வசதிகள் உருவாகாத காலகட்டத்திற்குள் இருந்த நிலையில் இருந்தது . அதாவது எந்தத் தொழில் நுட்ப மாறுதல்களையும் இவர்கள் உள்வாங்கவே இல்லை என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது .

மொத்தத்தில் நிறுவனத்திற்கு ஒரு பெயர் . அதற்கு நான் தான் முதலாளி என்ற கம்பீரம் . ஆனால் உள்ளே உயிரற்ற உடம்பாய் மொத்த நிர்வாகமும் ஸ்தம்பித்துப் போய்க் கிடக்கின்றது . அது குறித்த அக்கறையின்றி இன்னமும் சுயபெருமையைப் பறைசாற்றிக் கொண்டு வெட்கமின்றித் திரியும் மனிதர் வெளியே நின்று கொண்டு இன்னமும் தனது சுயபுராணத்தை நிறுத்தாமல் சொல்லிக் கொண்டிருந்தார் .

இவரை எப்படி அழைப்பீர்கள் ? எல்லாத் தொழிலும் முதலீடு செய்துள்ளவர்கள் முதலாளி தான் . ஆனால் அதற்கான தகுதிகள் எதுவுமின்றி இருந்தால் வந்த சுவடு தெரியாமலேயே போட்டு முதல் அனைத்தும் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் காணாமல் போய்விடும் அல்லவா ? அப்படித்தான் இங்கேயும் நடந்துள்ளது .

முதலாளி வெளியே நின்று கொண்டு இன்னமும் தன் சுயபுராணக் கதையைப் பேசிக் கொண்டிருந்தார் . விதியே என்று நொந்தபடி மீண்டும் அவர்களுடன் பயணித்து அலுவகத்திற்குத் திரும்பினேன் .

என் மனதிற்குள் வைராக்கியம் இன்னும் ஒரு படி அதிகமாக உருவாகியிருந்தது . அவசர சிகிக்சையில் இருப்பவனுக்கு ஆறுதல் தேவையில்லை . உடனடியாகச் செய்தே ஆக வேண்டிய முதலுதவிகள் தான் தேவைப்படும் .

இந்த நிறுவனத்தை மேலே கொண்டு வருவதற்கு முக்கியமான இரண்டு விசயங்களை உடனடியாகச் செய்தே ஆக வேண்டும் என்று என் மனதில் தோன்றியது . உடனடி வருமானம் வரக்கூடிய விசயங்களில் கவனம் செலுத்த வேண்டும் . அதுவும் உடனே செய்தாக வேண்டும் . தோட்டத்திற்குள் உற்பத்தித் துறை தவிர்த்துத் தனியாக மூன்று துறைகள் இருந்தது .

நிட்டிங் மற்றும் பிரிண்டிங் என்ற இரண்டு துறைகளில் கவனம் செலுத்தினால் வாரந்தோறும் குறிப்பிட்ட வருமானத்தை உள்ளே கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை உருவானது .

இவை இரண்டும் வாரந்தோறும் ஆயிரக்கணக்கில் வரக்கூடிய வருமானமாகத் தான் இருந்தது . ஆனால் உள்ளே இருந்த மற்றொரு துறையான சாயப்பட்டறையை மட்டும் இயக்க முடிந்தால் லட்சக்கணக்கில் கொண்டு வர முடியும் . ஆனால் அரசாங்க நடைமுறைகள் தொடங்கி ஒவ்வொன்றும் பயமுறுத்துவதாக இருந்தது .

சாயப்பட்டறையைப் பழையை நிலைமைக்குக் கொண்டு வருவது சாதாரண விசயமாகத் தெரியவில்லை . அரசாங்கம் சம்மந்தப்பட்ட பல சட்டசிக்கல்கள் இருந்தது . இதற்கு முன்னால் இருந்தவர்கள் புகுந்து விளையாடி இருந்தார்கள் . மின்சார வாரியம் ஒரு பக்கம் சீல் வைத்து விட்டு சென்று விட மற்றொரு புறம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆப்பு அடித்திருந்தார்கள் .

எந்தப்பக்கம் திரும்பினாலும் சேதாரம் ஏராளமாக இருந்தது . இது தவிர இதை மீண்டும் இயக்க கோடிக்கணக்கான ரூபாயை இதற்குள் இறக்கியிருந்தார்கள் . புதிய உபகரணங்கள் என்று ஆலோசனை சொன்ன ஒவ்வொருவரையும் நம்பி மனம் போன போக்கில் செலவழித்து இருந்தார்கள் .

” பட்ட காலிலே படும் . கெட்ட குடியே கெடும் ” என்ற பழமொழியைக் கேள்விப்பட்டு இருக்கின்றார்களா ? இதற்கான முழு அர்த்தமும் எனக்கு இங்கே தான் தெரிந்தது . ஒவ்வொரு விசயத்திற்குள்ளும் உள்ளே நுழைந்து வெளியே வந்த போது ஒரு நல்ல சிறுகதையின் சுவராசியம் போலவே எனக்குத் தெரிந்தது .

நேர்மையுடன் வந்து அணுகியவர்கள் அத்தனை பேர்களுக்கும் இவர் நாமத்தை பரிசாகத் தந்த காரணத்தினால் நேர்மையற்ற அத்தனை பேர்களும் வந்து அல்வா கொடுத்து விட்டு சென்று இருந்தார்கள் .

செலவு அதிகமானதே தவிர எந்தச் செயல்பாடுகளும் முடிவடையவில்லை . எல்லாமே அறைகுறையாக இருந்தது . ஒவ்வொன்றையும் மனதிற்குள் குறித்து வைத்துக் கொண்டேன் . என் கருத்து எதையும் சொல்லவில்லை .

எனக்கு நன்றாகப் புரிந்து விட்டது . எவர் எதைச் சொன்னாலும் அதைச் சந்தேகத்தின் அடிப்படையிலே பார்த்துப் பழகியவரிடம் நாம் என்ன சொன்னாலும் எடுபடாது என்பதைப் புரிந்து கொண்டேன் . நம் செயல்பாடுகள் மட்டுமே இவர் குணத்தை மாற்றும் என்பதை உறுதியாக நம்பினேன் . அப்பாவும் , மகனும் என்னை மீண்டும் அலுவலகத்தில் கொண்டு வந்து விட்டதும் என் திட்ட அறிக்கையைத் தயார் செய்யத் துவங்கினேன் .

முக்கியமாக உடனடியாகச் செய்ய வேண்டிய வேலைகள் . நிரந்தரமாகச் செய்ய வேண்டிய வேலைகள் என்று இரண்டு பகுதியாகப் பிரித்துக் கொண்டேன் . மூன்று வாரங்கள் இடைவிடாது பாடுபட்டதன் பலனாகப் பாதையின் தொடக்கம் தெரிந்தது .

முக்கியப் பதவிகளில் தகுதியான நபர்களை நியமிக்க முடிந்தது . அதிர்ஷ்டவசமாக ஒரு பெரிய ஒப்பந்தம் கைக்கு வந்தது .

பிரிண்ட்டிங் மற்றும் நிட்டிங் துறைக்கு நியமிக்கப்பட்டவர்களிடம் முதலில் சுத்தம் செய்து விட்டு எது முதலில் தேவை ? என்பதைக் கணக்கு எடுக்கச் சொன்னேன் .

சிறிய முதலீடுகள் தேவை என்பதை உணர்த்திய போதும் முதலாளி அது குறித்துக் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை . தொடர்பில் இருந்த நபர்கள் மூலம் கடனுக்கு ஏற்பாடு செய்து வேலைகள் நிற்காத அளவுக்கு விரட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்தேன் .

மாத இறுதியில் புதிதாகச் சேர்ந்தவர்களுக்குச் சம்பளம் நிர்ணயித்த போது தான் முதலாளியின் முழுச் சொரூபமும் எனக்குப் புரிந்தது . நாம் ஏன் இந்தச் சாக்கடையில் இருக்க வேண்டும் என்ற எண்ணமும் உருவானது .

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் Copyright © 2014 by Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book