ஆயத்த ஆடை சமூகத்தின் சிக்கல்களுக்கு விடை காண விழையும் தேடல் தாகத்துடன் இருக்கும் தனிமனிதர்களின் பிரதிநிதியாக உங்கள் பதிவுகள் இருக்கின்றன . இந்தச் சமூகத்தில் பொருளாதார அடிப்படையிலாலான காரணக் காரிய உறவுகள் நிரந்தர வெற்றிக்கு வழிகோலுவதில்லை .

தேவைப்பட்ட மனிதர்களுக்குப் பயனற்றவர்களாகி வேரோடு பிடுங்கி எறியப்பட்ட மரண வலியினை உணர முடிகிறது . இங்கு அனைத்து சிக்கல்களுக்கும் தற்காலிகமாக நிவர்த்திக்கப்பட்டுப் புதிய பிரட்சினைகளுக்கு அடியெடுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன . இந்தத் தற்காலிக நிவாரணம் எச்சரிக்கை மணியை அனைத்து வைப்பது போலத்தான் . இங்குப் பெரும்பாலான முதலாளிகளும் உழைப்பாளிகளும் முடிவுகள் எடுப்பதில் கடந்த கால அனுபவ அறிவை மட்டும் நம்பிக்கொண்டு புதியனவற்றை ஏற்றுக்கொள்ளாத சமூகமாகத்தான் இன்னும் இருந்துகொண்டிருக்கின்றது .

பழக்கத்தில் இருக்கக் கூடாதவற்றைப் பின்பற்றுவதால் தொழில் ரீதியான விபத்துகள் இழப்புகளை அதிகம் ஏற்படுத்துகின்றன . உற்பத்தி முறைகள் மரபு மாரதவைகளாக இன்னமும் இருக்கின்றன . இதனால் தொழில் மட்டும் வளர்ச்சி அடைந்திருக்கிறது தொழிற்சாலைகள் நீண்ட காலம் வாழ்வது இல்லை . சிறிய வேர்களை வைத்துகொண்டு பெரிய மரங்கள் வளர முடியாது .

வலுவில்லாத வேர்கள் பெரிய மரங்களைச் சுமக்க முடிவதில்லை . நபர்களைச் சார்ந்து நிற்பதை தவிர்க்கமுடிவதில்லை . நபர்களைச் சார்ந்த தொழிற்சாலைகளின் வளர்ச்சி பாகுபாடின்றிப் பரஸ்பர துரோகத்தில் வீழ்ந்து விடுகின்றன .

தொன்று தொட்டு ஒரு குறிப்பிட்ட விஞ்ஞானத்தில் வரப்போகிற தலைமுறை முந்தைய தலைமுறையின் ( கற்பித்தல் மூலமாக இல்லாமல் ) அனுபவத்தினைப் புலப்படாத தொடர்பில் பெற்றுக்கொண்டிருக்கிறது . அந்த விஞ்ஞானம் முதிர்ச்சியடையாத ஒன்று . எதுவும் ஒரு குறிப்பிட்ட ஊருக்குச் சொந்தமானதல்ல .

வானம் பார்த்த பூமியாகக் கார்காலத்தில் பருத்தி , எள் , சோளம் கம்பு ராகிப் போன்ற பயிர்களை விதைத்து

விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டு சிரமப்பட்டு வாழ்ந்தது வந்த மூதாதையர்களின் மண்தான் திருப்பூரும் . காவிரியும் தாமிரபரணியும் முல்லைபெரியாரும் பாயும் ஊரில் வயலில் நடவு செய்துவிட்டு காலாற இருந்தவர்கள் அல்ல திருப்பூர் மக்கள் .

பஞ்சாலைகளில் இராப்பகலாக உழைத்தவர்களின் வாரிசுகள்தான் பெரும்பாலான பழைய முதலாளிகள் . ஒவ்வொரு முதலாளியின் பின்னாலும் சிறந்த உழைப்பாளியின் அனுபவக் கதை இருக்கும் . ஒவ்வொருவரும் உழைப்பாளியாகச் சுரண்டப் பட்டுத்தான் முதலாளியானார்கள் . அவர்களுடைய உழைப்புதான் இங்கு வந்தாரை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது . நபர்களைச் சாராத தொழில் நுட்பம் சார்ந்த புதிய அணுகுமுறை பின்பற்றப் பட வேண்டும் . இந்தச் சமூகத்தில் தற்காலிக வெற்றியாளர்களின் , புத்திசாலிகளின் அவநம்பிக்கை விஞ்யான ரீதியான அணுகுமுறைகளைத் தடை செய்கிறது . பாரம்பரியமாக வந்த பல வற்றை நாம் மறு பசிசீலனை செய்ய வேண்டும் . அனுபவத்திற்கும் புதுமைக்கும் எல்லை பிரிக்கப்பட வேண்டும் . அனுபவத்தை ஆதரிக்கும் அதே வேளையில் பாரம்பரியத்தைத் துடைத்துப் போட்டுச் சுத்தப்படுத்திக் காலத்திற்கு ஏற்ப புதுமையைப் புகுத்திக்கொண்டே இருக்கவேண்டும் . இந்தச் சுழற்சி நடைபெறாத நிறுவனங்கள் சிறிய வேர்களைகொண்டு வளரும் மரங்கள் போன்றதுதான் .

தான் யாரென்று தெரியாமல் யாரைப் போலவோ எதுவாகவோ ஆகவேண்டும் என்று இலக்கு மட்டும் வைத்தவர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் தோல்வியில் தான் முடிந்திருக்கிறார்கள் . நமது இருப்பைத் தெரிவதுதான் இந்த மாற்றத்தின் துவக்கம் . பல்வேறு நிறுவனங்களின் வெற்றி தோல்வி குறித்த பல்வேறு ஆதாரங்களை , தகவல்களைத் திரட்டி அது குறித்து ஆய்வுகள் செய்ய வேண்டும் . உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் ஆயத்த ஆடை உற்பத்தி முறையை ஒருங்கிணைத்து முற்றிலும் புதிய அணுகுமுறையைக் கொண்டுவரவேண்டும் . அதை நோக்கிய பதிவுகள் எதிர்காலத்தில் உங்களிடம் இருந்து வரவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு . கடந்த கால அனுபவங்களைச் சுவாரசியமாகச் சொல்வது போல் இதனையும் முயற்சி செய்தால் உங்களால் திருப்பூரின் வருங்க்கலச் சந்ததி மேலும் பயன்பெறும் . நன்றி ,

சமகாலத் திருப்பூர் பயணி விஸ்வநாதன் .

factory_html_3c09cc1a

factory_html_9ba03409

factory_html_e04189f9

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் Copyright © 2014 by Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book